Monday, March 5, 2012

ஹையா .... நினைத்தது நடக்கவில்லை!!

நாம் நினைப்பது சில சமயங்களில் அப்படியே நடக்கும்..சில சமயங்களில் நடக்கிறா மாதிரி இருந்து அப்புறம் ரூட் மாறிப்போய்விடும். நினைத்தது நடக்காத சமயங்களில் மனம் வெறுத்துவிடாமல் இருக்க நான் சில சமயங்களில் ஒரு உத்தியை மேற்கொள்வேன். (ரொம்ப கற்பனை பண்ணாம வாசிக்கணும்...ஆமா)

என்ன நடந்தா நம் மனது சந்தோஷப்படணும்னு ஆசைப்படுறோமோ அதுக்கு நேரெதிராக மனதில் நினைத்து கொள்வேன்..உதாரணத்திற்கு எங்க வீட்டு அய்யாதுரையிடம் எதையாவது வாங்கித்தர சொல்லணும்னு மனம் ஆசைப்படும்போது அதை அவர் வாங்கித்தரலேன்னா என்ன சொல்லி சண்ட போடலாம்னு மனசுல வாக்கியங்கள தேர்ந்தெடுத்து தயாராக்கி வச்சுப்பேன். ஆனா அதிசயம்..கேட்டவுடனே வாங்கித்தந்துடுவாங்க ... ( ;-) போடலாமா? :-( போடலாமா?) சரி ஒன்றை இழந்தாத்தானே இன்னொன்று கிடைக்கும்... சண்டையை இழந்து ஆசைப்பட்டது கிடைச்சிருக்குன்னு மனச சமாதானப்படுத்திக்குவேன்.( சில விஷயங்களில் தான் இப்படி..பல விஷயங்களில் தலைகீழா நின்னாலும் ஒண்ணும் தேறாது :-((... அட நம்புங்க...)

கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு சம்பவம்... நான் நினச்சது நடக்கல....அப்படி நடக்காததில் சந்தோஷப்பட்டாலும் வருத்தமும் ஒரு திருப்தியும் இருந்துச்சு....  என்ன... தலை சுத்தி கீழ விழுந்திடுச்சா.... சரி...சரி.. எடுத்து மாட்டிக்கிட்டு மேல ... அட... கீழ படியுங்க...


எங்க வீட்டுக்குப் பக்கத்தில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் எனக்கு தோழியாக கிடைத்தார். அவருடைய குடும்பமும் ரொம்ப இபாதத்தான (இறைபக்தி), இறையருளால் மகிழ்ச்சிகரமான குடும்பம். தோழியுடன் பிறந்தவர்கள் 5 பேர். ஒரு அண்ணன்...ஒரு தங்கை... மீதி 3 தம்பிங்க.. (கணக்கு சரியாகிடுச்சா?) அண்ணன் சவூதியிலயும் தங்கையும் ஒரு தம்பியும் அமெரிக்காவிலயும் ஒரு தம்பி பெங்களூருவிலயும் ஒரு தம்பி சிங்கை(ன்னு நினைக்கிறேன்)லயும் இருக்காங்க... அப்பா அம்மா ஊரில் தனியாக வசித்து வந்தார்கள். இதை அந்த அக்கா சொன்னதும் நான் நினச்சதுதான் இந்தப் பதிவுக்கே அடித்தளம்... அதாவது 'ஆசையாசையா பிள்ளைகள பெற்று வளர்த்தாங்க...இப்ப அவங்க தனியா ஊர்ல இருக்காங்களே.பிள்ளைகளும் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்காமல் அவர்களின் தாய் தந்தை நினைத்தாலும் இவர்களை ஒன்றாக சந்திக்க முடியாத தூரங்களில் இருக்கிறார்களே. ' அப்டீன்னெல்லாம் குதிரை அது பாட்டுக்கு ஒடிட்டு இருந்துச்சு....


இந்த சமயத்துல அவங்களோட தம்பியின் திருமணத்திற்கு எல்லாருமா ஊருக்கு போய்விட்டு வந்தார்கள். ஊரிலிருந்து திரும்பி வரவே மனசில்லை...  என்று அக்கா வருத்தப்பட்டார்கள். நானும் 'அக்கா..வருத்தப்படாதீங்க..கடைசி தம்பி திருமணமும் இது போல் விரைவில் மகிழ்ச்சிகரமானதாக அமையும்' னு சொல்லி வச்சேன். 'இன்ஷா அல்லாஹ் பானு' அவங்க சொன்னாங்க.

சில மாதங்களுக்குப் பிறகு அவங்க தங்கையின் பிரசவத்திற்கு அவரது பெற்றோர் அமெரிக்காவில் 6 மாதம் தங்கியிருந்தனர். பிறகு அக்காவுடைய பிரசவத்துக்கும் இங்கு வந்து 2 மாதங்கள் தங்கியிருந்தனர். நான் அப்பொழுது தற்செயலாக அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தேன். அன்றுதான் அவரது பெற்றோரின் பயணமும் அமைந்திருந்தது. தவிர்க்க முடியாத காரணத்தினால் 1 மாதம் முன்பே அவர்கள் கிளம்ப வேண்டியிருந்தது. அவரது அம்மா கையால் சமைத்த சுவையான மீன் பிரியாணி சாப்பிட்டுவிட்டு தொழுகைக்குச் சென்று திரும்பிய அவரது அப்பாவையும் சந்தித்து விட்டு கிளம்பினேன். அன்று அவர்கள் சவூதியில் இருக்கும் அவரது பேரக்குழந்தைகள் அவர்களை அழைத்ததால் அங்கு போய் சிறிது நாட்கள் தங்கிவிட்டு ஊருக்குச் செல்லவிருப்பதாக தெரிவித்தார்கள். ஹ்.ம். கொடுத்து வைத்தவர்கள்... பிள்ளைங்க நாலாப்பக்கமும் இருந்தா இது ஒரு வசதி... ஹாயாக ஊரைச் சுற்றலாம். அப்டீன்னு நினைச்சுக்கிட்டேன்.

சவூதிக்குச் சென்றவர்களுக்கு உம்ரா (சிறிய ஹஜ்) செய்ய விருப்பப்பட்டு மகனிடம் சொல்ல அவரது மகன்கள் அனைவரும் ஒரு வார விடுப்பு எடுத்துக் கொண்டு அவருடன் உம்ரா சென்றிருக்கிறார்கள். உம்ரா செய்துவிட்டு டேக்ஸிக்கு காத்திருக்கும் வேளையில் நெஞ்சு வலிக்கிறது என்று பிடித்துக் கொண்டு அமர்ந்தவரின் ரூஹ் பிரிந்திருக்கிறது..இன்னா லில்லாஹி.. (இறைவனிடமிருந்தே வருகிறோம்...மீன்டும் அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது).

தமிழ்நாட்டில் எங்கோ இருந்தவர் அமெரிக்கா,அபுதாபி என்று இறையருளால் சிலகாலம் இருந்தவர் மக்காவில், உலகின் நான்கு திசைகளிலிருந்து வந்த மகன்கள் சூழ, மரணத்தைத் தழுவிய காட்சி மனதில் நிறைந்து ஆச்சரியம் பொங்குகிறது. இறைவனின் வாக்கு தான் எத்துனை உண்மையானது... இதோ அவ்வாகுகள்:

3:154  "“நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்திருந்தாலும், யாருக்கு மரணம் விதிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் (தன் கொலைக்களங்களுக்கு) மரணம் அடையும் இடங்களுக்குச் சென்றே இருப்பார்கள்!” என்று (நபியே!) நீர் கூறும். (இவ்வாறு ஏற்பட்டது) உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் சோதிப்பதற்காகவும், உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை (அகற்றிச்) சுத்தப்படுத்துவதற்காகவும் ஆகும் - இன்னும், அல்லாஹ் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்."

4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

45:26. “அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும்.