Friday, October 23, 2015

வாடகைத்தாய்- வரமா? சாபமா?

சமுதாயத்தில் இன்று பெருகிவரும் வாடகைத்தாய் முறை குறித்த என்னுடைய சிறு பதிவு, இஸ்லாமியப் பெண்மணி தளத்தில்.

//தன் கருமுட்டையினை மட்டும் வழங்கினால் தாய் அந்தஸ்தைப் பெறமுடியும் என்றால் பத்து மாதங்கள் சுகமான சுமையாகச் சுமந்து, சொல்லொணா துயருடனும் வலியுடனும் அக்குழந்தையைப் பெற்றெடுப்பவளுக்கு அதை விடவும் அதிக உரிமையும் தாயாகும் தகுதியும் உருவாகிறது. எனில், அக்குழந்தையின் தாய் யார்? கருத்தாய், கருவைச் சுமந்து, உயிரைப் பணயம் வைத்து மறு ஜென்மம் எடுத்து பெற்றெடுப்பவளா? கருமுட்டையையும்பணத்தைக் கொடுத்துப் பிள்ளையை வாங்கியவளா? //

மேலும் படிக்க:
http://www.islamiyapenmani.com/2015/10/blog-post_22.html

தமிழ்மண ஓட்டு லின்க்
http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1386317

Thursday, October 22, 2015

அக்கறையை வென்ற வாக்கியம்

(சமீபத்தில் ஓர் உண்மைச்சம்பவம் படித்தேன். அதனைத் தழுவி எழுதப்பட்டது.)

ஒரு முஸ்லிமல்லாத பெண் என்னை நோக்கி வேகமாக வந்து “இந்த பர்தாவையும் முக்காடையும் ஏன் அணிகிறாய்?” என்றார். அவரது வார்த்தைகளில், இந்த பர்தா எனும் கட்டுப்பாடுகளில் இருந்து என்னைப் பாதுகாக்கும் அக்கறையும் என்னை அடிமைப்படுத்துவதாக அவர் நினைத்துக்கொண்டவர்கள் மீது கோபமும் எனக்குப் புரிந்தன.

என் மீதான அவரது அக்கறையும் யாரோ மீதான அவரது கோபமும் அவருக்குத் தேவையற்றது என்பதை நான் அறிவேன். அவர் கேட்டவுடன் இது என் மார்க்கம் எனக்குக் கட்டளையிட்டுள்ள ஒரு வழிமுறை; பாதுகாப்புக்கவசம்; என் இறைவனின் வார்த்தை; எனக்கான கண்ணியம் என்றெல்லாம் அவரிடம் கூறிவிட ஆசைதான். ஆனால் அதனை அவர் புரிந்துகொள்வார் என்று எனக்குத் தோன்றவில்லை.

அதனால் ஒரே வாக்கியத்தின் மூலம் இவ்வனைத்தையும் அவரிடம் தெரிவிக்கத் துடித்தேன். அந்த பதிலானது அவரிடம் இருந்து எந்த பதிலையும் எனக்குத் தரக்கூடாது. அந்த பதில் இவ்வனைத்தையும் அவருக்குப் புரியவைத்துவிட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு வார்த்தையை அல்லாஹ் எனக்கு அச்சமயத்தில் கற்பித்தான்.

“இது எனக்குப் பிடித்திருக்கிறது”

அவ்வளவுதான்.. அவ்வளவுதான் என் பதிலாக இருந்தது. என் புன்னகையுடன் வெளிவந்த அந்த பதிலில் அவர் கட்டுண்டார். மறுவார்த்தை கூறாமல் வந்த வழியில் திரும்பிச்சென்றுவிட்டார். நிச்சயம் என் பதில் அவர் மனதை அசைத்திருக்கும். மேற்கூறிய அந்த அக்கறையும் கோபமும் தணிந்திருக்கும், இன்ஷா அல்லாஹ்.

Thursday, October 1, 2015

உண்மைப் படம்; குட்டிக் கற்பனைக்(?) கதை

அலுவலகம் வந்ததிலிலிருந்து பரபரப்பு அகிலாவிற்கு. பரபரப்பு என்பது அவளுக்குப் புதிதல்லதான். அன்று அகிலாவின் நிறுவனம், அந்த டெண்டரை ஏலத்தில்  எடுத்துவிட்டதில் வாழ்த்து மழை குவிந்துகொண்டிருந்தது, அகிலாவை மேலும் மேலும் பிசியாக்கியது. அவளுக்குப் புரியாமலில்லை.. இத்தனை வருடங்களில் இதே டிம்பர் துறையில் இளம் வயதிலேயே பழம் தின்று கொட்டை போட்டவளுக்கு, இதுவரை அவளுக்கு வந்த வாழ்த்துகளிலும் பூங்கொத்துகளிலும் எத்தனை உண்மை, எத்தனையெத்தனை வேஷம் என்பதை அவளது உதட்டுப் புன்னகையே அவளது செக்ரட்டரிக்கு விளக்கிக்காட்டியது. 

வாழ்த்துகள் வந்த வரிசையில் பத்தோடு பதினொன்றாக அந்த ஃபோன் காலும் வந்தது. 

“ஹலோ.. அகிலா ஹியர்”

“ஹலோ... அகிலா மேடம்... டெண்டர் கிடைத்ததில் மனமார்ந்த வாழ்த்துகள்”

“நன்றி... நீங்க... இந்த நம்பர் புதுசா இருக்கே”

“ஓ... என்னை உங்களுக்குத் தெரியாதுல்ல....”

வளவளவெனப் பேசுவது அகிலாவிற்கு சுத்தமாகப் பிடிக்காத ஒன்று. இந்த உரையாடலும் அந்த வகையறாவைச் சேர்ந்ததென தோன்றினாலும் தன்னை நன்கு தெரிந்த ஒருவர் என ஊர்ஜிதம் செய்தாள்.

பேசிக்கொண்டிருக்கும்போதே  தன் பெர்சனல் ஃபோனில் அவளது மகள் அனுப்பிய படம் அவளை அழைத்தது. சஞ்சனா, Mr.Bean போல் வேடமிட்ட ஒருவருடன் எடுத்த ஃபோட்டோ. “Haaaai.. mooooom.....It's cool naa?" என்று குதூகலமாக அனுப்பியதை ரசித்தவளிடம்,



”பட் எனக்கு உங்களை, உங்க மகளை.... ம்ம்ம் சஞ்சனா.. நைஸ் கேர்ள். Mr.Bean என்றால் ரொம்பப்பிடிக்குமோ.. எனிஹவ்.. அவளுடைய சமத்துவம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு”

தன் மகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பவன் இவனா? அதிர்ச்சி ஒரு நொடியில் உடல் முழுக்க வியர்க்க் வைத்தது; நாடித்துடிப்பை எகிற வைத்தது.

“ஹேய்.... ஹேய்... யார் நீ? எங்கே இருக்கே? என்ன வேணும் உனக்கு?” 

இவ்வளவு நேரமும் கொஞ்சிப் பேசிய குரல், அதிகபட்ச அதிகாரத்துடன்,

“Cancel the tender at any cost else your child will be lost”

இணைப்பு துண்டிக்கப்பட்டது.